ள்ளக்குறிச்சி

திமுக மாவட்ட செயலர் குமரகுரு முதல்வர் குறித்த தனது அவதூறுப் பேச்சுக்கு பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த 19 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு கலந்து கொண்டு பேசினார். அவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசினார் என்று கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் திமுக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் புகார் கொடுத்தார்.

குமரகுரு மீது 4 பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் குமரகுரு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, முதல்வர், அமைச்சர் குறித்து குமரகுரு எந்த இடத்தில் அவதூறாகப் பேசினாரோ, அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தி, அதில் முதல்வர், அமைச்சர் குறித்து ஏற்கனவே பேசிய பேச்சுக்கு நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்டால் அவருடைய முன்ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

நேற்று, கள்ளக்குறிச்சி மந்தைவெளியில்  அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான கூட்டம் மற்றும் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். குமரகுரு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர்,

”நான் கடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசுகையில், உதயநிதி ஸ்டாலினை பற்றி தவறாக ஒரு வார்த்தை வந்து விட்டது. தவறான வார்த்தை எனத் தெரிந்தவுடன் நான் பேசிய வார்த்தை தவறு என சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்தேன். அதனைப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ளனர். மேலும் நான் பேசிய வார்த்தை அவர்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் அதற்கு இந்த கூட்டத்தின் மூலம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த காலத்திலும் நான் பேசும் வார்த்தை மற்றவர்கள் மனது புண்படும் வகையில் இருக்காது. 

என்று கூறி உள்ளார்.