டில்லி

நாளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக்கூட்டம்  நடைபெற உள்ளது.

தமிழகத்துக்குக் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.  முதலில் தண்ணீர் திறந்து விடப்பட்டு பிறகு திடீரென கர்நாடக அரசு தண்ணீரை நிறுத்தி விட்டது.

தமிழகத்துக்கு 2-வது கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்துக்குப் பரிந்துரை செய்தது.  கர்நாடகாவில்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அனைத்து கட்சி அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

தமிழக அரசு ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்த பிறகும் கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதுதான் கடைசி முடிவு எனத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து இருந்தார். மேற்படி வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 21-ந்தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.

நாளை காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்  நடைபெற உள்ளது.  இக்கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என கூறப்படுகிறது.  கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பங்கேற்கும் அதிகாரிகள் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டப் போராட உள்ளனர்.

கர்நாடகா அரசு  தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்து உள்ள நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நாளை நடைபெறுவதால் தமிழகத்தின் நிலை குறித்து அதிகாரிகள் எடுத்துக் கூறி அதன்பேரில், காவிரி மேலாண்மை ஆணையம் நியாயமான உத்தரவைப் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

g,