சிம்லா

மாசலப் பிரதேச ஆப்பிள் விவசாயிகளை மத்திய அரசின் நடவடிக்கை கடுமையாகப் பாதிக்கும் எனப் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பருவமழை தொடங்கியதில்  இருந்து இமாசல பிரதேசத்தில் கனமழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர்.  காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிடுவதற்காக 2 நாள் பயணமாக இமாசல பிரதேசம் சென்றார்.

நேற்று முன் தினம் பிரியங்கா காந்தி குலு, மண்டி, சிம்லா மற்றும் சோலன் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளை ஆய்வு செய்தார். நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.  கடந்த ஆகஸ்ட் 14-ந் தேதி சம்மர் ஹில்லில் உள்ள சிவன் கோவிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்த பகுதியைப் பிரியங்கா காந்தி நேற்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பிறகு  பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம்,

“அண்மையில் இமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட பேரிடரைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இந்த இமாச்சலப்பிரதேச நெருக்கடியைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் மண்டியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்., பிரதீபா சிங் எழுப்புவார். 

 அமெரிக்க ஆப்பிள்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்கும் மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கையைக் கண்டிக்கிறேன், இம்மாநிலத்தில் ஏற்படும் சேதத்தின் அளவு குறித்து மத்திய அரசு முழுமையாக அறியவில்லை. பொதுவாக ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படும்போது கொள்முதல் விலையும் குறையும்.எனவே இமாசல பிரதேசத்தில் ஆப்பிள்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” 

என்று கூறினார்.