சென்னை: திமுக அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கில் இரு தரப்பும் சமரசம் செய்துகொண்டபடியால், வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்தை தொடர்ந்து, கே.என்.நேருமீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகவும், நகராட்சி நிர்வாகங்கள் துறை அமைச்சராக இருந்து வருபவர் மூத்த நிர்வாகி கே.என்.நேரு. இவர் கடந்த 2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்ததோடு திருச்சி மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தார். அப்போது, திருச்சியில் திமுகவுக்கு புதிய மாவட்ட அலுவலகம் அமைக்கும் வகையில், திருச்சியின் மையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு அதற்கு கலைஞர் அறிவாலயம் என்று பெயர் வைக்கப்பட்டு திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டிடத்திற்கான நிலம் தொடர்பாக புகார்கள் எழுந்தது. கலைஞர் அறிவாலயம்’ கட்டடத்துக்கான நிலம் தன்னிடம் இருந்து வாங்கப்பட்டதாகவும், பல கோடி மதிப்புள்ள நிலத்துக்கு, தன்னை மிரட்டி மிகக் குறைந்த விலையே தரப்பட்டதாகவும் சீனிவாசன் என்பவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இந்த புகார்மீது, அடுத்து வந்த அதிமுக ஆட்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. திருச்சி குற்றப்பிரிவு போலீசார் கே.என்.நேரு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கே.என்.நேரு அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும், தன்மீதான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு மனுதாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் இரு தரப்பும் சமரசமாக சென்றுவிட்டதாக தனித் தனியாக மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், கே.என்.நேருவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து இன்று உத்தரவிட்டார்.
முன்னதாக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுவித்தன. இந்த வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன் விசாரணைக்கு எடுத்துள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கை ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே அமைச்சர்கள்மீதான வழக்கை தானேகவே விசாரணைக்கு எடுத்த நீதிபதியை திமுக அமைப்பு செயலபாளர் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், கே.என்.நேரு மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு, சமரசம் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் , மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த நிலையில், தற்போது அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஆட்சி மாறியதும் காட்சி மாறுவது வாடிக்கையாகி வருகிறது. ஆட்சியாளர்களின் மிரட்டல் காரணமாக பலர் வழக்குகளை வாபஸ் பெறுவதும், சமரசம் செய்து கொள்வதும் தொடர்ந்து வருகிறது. இது நீதிதித்துறைக்கும் சவால்களை ஏற்படுத்தி உள்ளன.
[youtube-feed feed=1]