மராவதி

ந்து அமைப்பு தலைவர் சம்பாஜி சிங் மீது மகாத்மா காந்தி பற்றி அவதூறு கருத்து கூறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி குறித்து அமராவதி மாவட்டம் பத்னேரா சாலையில் உள்ள பாரத் மங்கல் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘ஸ்ரீ சிவ் பிரதிஷ்தான் இந்துஸ்தான’ அமைப்பின் நிறுவனர் சம்பாஜி பிடே தேசத்தந்தை அவதூறு கருத்துகளைக் கூறியதாகத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் நந்த்கிஷோர் குயதே, அமராவதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மகாராஷ்டிரா சட்டசபையிலும் இது எதிரொலித்தது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர். பாலாசாகேப் தோரட், சம்பாஜி பிடே மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான், மகாத்மா காந்தி குறித்து அவதூறாக பேசிய சம்பாஜி பிடே சுதந்திரமாகச் சுற்றித்திரிவதற்கு உரிமை இல்லை. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பேசினார்.

சம்பாஜி பிடேவை கைது செய்ய வலியுறுத்தி அமராவதி நகரில் உள்ள ராஜ்கமன் சதுக்கத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர். யசோமதி தாக்கூர், முன்னாள் அமைச்சர் சுனில் தேஷ்முக் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில பகுதிகளில் போராட்டத்தின் போது சம்பாஜி பிடேவின் பதாகைகளைக் கிழித்து எரிந்தனர். அவருக்கு எதிராக யவத்மால் மாவட்டத்திலும் போராட்டம் நடைபெற்றது.

மகாத்மா காந்தி குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் சம்பாஜி பிடே மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதம், இனம், பிறப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் மக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், நல்லிணக்கத்தைப் பேணுவதற்குப் பாதகமான செயல்களைச் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே அவர் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.  அவர் கூறுகையில், ” மகாராஷ்டிரா அரசு சம்பாஜி பிடேவை கைது செய்யாவிட்டால் ஆகஸ்ட் 4-ந் தேதி சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் முடிந்தபிறகு, காங்கிரஸ் கட்சி மராட்டியம் முழுவதும் போராட்டம் நடத்தும்.” என்று கூறி உள்ளார்.