சென்னை

சென்னை அடையாறு கலாஷேத்ரா  மாணவிகள் பாலியல் வழக்கில் 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அடையாறு பகுதியில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி அமைந்துள்ளது.  இக்கல்லூரி மத்திய கலாச்சார அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது.  இக்கல்லூரி மாணவிகள் சிலர் கடந்த மார்ச் மாதம் காவல்துறையில் பேராசிரியர் ஹரிப்த்மன் மீது பாலியல் குற்றச்சாட்டு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Hari Padman

அடையாறு மகளிர் காவல்துறையினர் இது தொடர்பாகப் பெண் வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹரிபத்மனை கைது செய்தனர். மாநில மகளிர் ஆணையமும் விசாரணை நடத்தியபோது பாதிக்கப்பட்ட மாணவிகள் 162 பேர் புகார் அளித்தனர். இது தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் சென்னை காவல் துறைக்குப் பரிந்துரை செய்தது.

பாலியல் புகார் தொடர்பாக மாணவிகள், பேராசிரியர்கள் என 60-க்கும் மேற்பட்டவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி விவரங்களைச் சேகரித்தனர். அடையாறு மகளிர் காவல்துறையினர் புலன் விசாரணை முடிந்து 250 பக்க குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.  விரைவில் இந்த வழக்கு மீதான விசாரணை வர உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கைதான பேராசிரியர் ஹரிபத்மன், 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்ததையடுத்து கடந்த ஜூன் 6-ந் தேதி அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஹரிபத்மன் ஜாமீனில் வெளிவந்து தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருவது குறிப்பிடத்தக்கது.