ட்டி

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் காய்கறி, பழ வடிவில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது. அப்போது கண்காட்சிகள், சிறப்பு மலர் அலங்காரங்கள் இடம்பெறுவது வழக்கம்.  ஊட்டிக்கு வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

பொதுவாக இவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள். அங்கே உள்ள பழமையான மரங்கள், கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, இலை பூங்கா, பெரிய புல்வெளி மைதானம், மலர் மாடம், அலங்கார வேலிகள் போன்ற இடங்களில் பல வண்ண மலர்களைக் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்கும் வகையில் நிழற்குடைகள் உள்ளன.

வரும் ஆண்டு கோடை சீசனுக்கு முன்பாக சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதில் ஒரு பகுதியாகச் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து செல்பி எடுக்கும் வகையில் ஆப்பிள், பப்பாளி, தர்பூசணி, கேரட், பாகற்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறி, பழ வடிவங்களில் இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்து தற்போது அந்த பணிகள் முடிந்து இருக்கைகள் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்து உள்ளது.

இருக்கைகள் கண்ணைக் கவரும் வகையில் பழங்கள், காய்கறிகள் வடிவில் தத்ரூபமாக அமைக்கப்பட்டு பழ, காய்கறிகளை வெட்டி வைத்து இருப்பது போல் காட்சி அளிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் அவற்றில் அமர்ந்து தம்படம் மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து. பூங்காவின் இயற்கை அழகை ரசித்து வருகின்றனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்ட புதிய இருக்கைகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.