சென்னை

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையத்தை அமைக்கச் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் மாதம் இந்தப் பணிகள் முடிந்து “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட உள்ளது.

தவிர கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில் நிலையம் மற்றும் ஆகாய நடைபாதை அமைக்கச் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்தது.   இன்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 273-ஆவது குழுமக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

அப்போது புதிதாகக் கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பொதுமக்களின் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்த, தாம்பரம்-செங்கல்பட்டு புறநகர், ரயில் பாதையில் புதிய புறநகர் ரயில் நிறுத்தம் மற்றும் ரயில் நிறுத்தத்திலிருந்து பேருந்து முனையத்தை இணைப்பதற்கு ஆகாய நடைமேடை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் ஒரு புறநகர் ரயில் நிலையம் அமைக்க ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

எனவே ரூ.20 கோடி செலவில் இங்கு ரயில் நிலையம் அமைய உள்ளது. இந்த பணிகளை ரயில்வே மேற்கொள்ள உள்ளது. இதற்கு முதல் கட்டமாக ரூ.4 லட்சம் நிதியை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் விரைவில் ரயில்வே நிர்வாகத்திற்கு அளிக்க உள்ளது. மேலும் தற்போது ஆகாய நடைபாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் இந்தப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பிறகு கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளன.