டில்லி

னியும் அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்தும் அவருக்கு மூன்று முறை மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது.  இந்த நீட்டிப்பை எதிர்த்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

மனுதாரர்கள் தரப்பில்  ஒரு குறிப்பிட்ட நபருக்கு இதுபோல் தொடர்ந்து பதவி நீட்டிப்பு வழங்குவது அமைப்பின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என வாதிடப்பட்டது. ஆனால் இந்த பதவியைப் பதவி உயர்வின் மூலம் நிரப்ப முடியாது என்பதால், பதவி நீட்டிப்பு செய்யப்பட்டதாகவும் இந்த நீட்டிப்பு யாருடைய வாய்ப்பையும் பறிப்பதாகக் கருத முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

நீதிபதிகள்,  ”ஒரு குறிப்பிட்ட நபரின் பதவிக் காலத்தை மீண்டும் மீண்டும் நீட்டிப்பதன் காரணம் என்ன?  அவர் ஒருவரால் மட்டுமே அந்த பதவிக்குரிய கடமையைச் செய்ய முடியுமா?  அதை வேறு யாராலும் செய்ய முடியாதா?  அவர் ஓய்வு பெற்ற பிறகு அந்த பதவியின் நிலை என்னாகும்? எனக் கேள்விகள் எழுப்பினர்.

இதற்குப் பதில் அளிக்க முடியாத நிலையில் மத்திய அரசு சார்பில், “வரும நவம்பர் மாதத்தோடு அமலாக்கத் துறை இயக்குநராக இருக்கும் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் முடிவடைகிறது. அதற்குப் பிறகு அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட மாட்டாது” என மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.