கொல்கத்தா

நேற்றைய ஐபிஎல் போட்டியில் பஜ்சாப் கிங்ஸ் அணியைக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி பந்தில் வென்றுள்ளது.

நேற்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.  போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  அணியின் கேப்டன் ஷிகர் தவான் பொறுப்புடன் ஆடி ரன்களை குவித்தார்.  ஆயினும் எதிர் முனையில் விக்கெட்டுகள் சரிய, மற்றவர்கள் யாரும் பெரிதாக ரன்கள் எடுக்க  முடியவில்லை.

பஞ்சாப் அணியின் முக்கிய வீரர்களான பிரப்சிம்ரன் சிங் 12, லியாம் லிவிங்ஸ்டோன் 15 , ஜிதேஷ் சர்மா 21, ஷாருக் கான் 21, ஹர்பிரீத் பிரார் 17, ரிஷி தவான் 19 ரன்களில் ஆட்டமிழந்தனர்.  இருப்பினும்ஷிகர் தவான் 57 ரன்கள் சேர்த்ததால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.

இந்த இன்னிங்ஸில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட், ஹரிஷ் ராணா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பிறகு 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு அவ்வணியின் கேப்டன் நிதிஷ் ராணா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  நிதிஷ் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.  ஜேசன் ராய் அவருக்கு முன்னதாக 38 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார். பிறகு ரஹ்மனுல்லா குர்பாஸ் 15 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தாலும், இறுதிக்கட்டத்தில் ரஸ்ஸல் 42 ரன்களும், ரிங்கு சிங் 21 ரன்களும் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். அதுவும் கடைசி பந்துக்கு முன்னதாக ரஸ்ஸல் அவுட் ஆனதால், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இருந்தாலும் கடைசி பந்தில் ரிங்கு சிங் பவுண்டரி அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெறச் செய்தார்.