சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவால் காலமான நிலையில், அவரது மறைவுக்கு முதலமைசர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பல அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (வயது 95)   வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த ஒரு சில வாரமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் நேற்று இரவு வீட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டார். பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு 10 மணியளவில் பழனியம்மாள் உயிர் பிரிந்தது.

இதுகுறித்து சென்னையில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பெரியகுளத்திற்கு விரைந்தார். தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்கான ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவெய்திய செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.