சென்னை: எடப்பாடி பழனிச்சாமி, ஓப்பனீர்செல்வத்திற்கு நன்றி என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாரதிய ஜனதா கட்சி முழு ஆதரவை தெரிவித்துக்கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் தென்னரசு வெற்றிக்காக பாடுபட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

சட்டப்பூர்வ வேட்பாளரை முன்னிறுத்தியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, கூட்டணியின் நன்மை கருதி வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் ஒ பன்னீர்செல்வத்திற்கும் நன்றி. வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும் வண்ணம் கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாகஅண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், ஈரோடு-கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவிற்கு பாரதிய ஜனதா கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்து கொள்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக, சட்டப்பூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.