சென்னை: தமிழ்நாட்டில், பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி சென்னையில் இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் சரத்குமார் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் தலைமையில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றன. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் சரத்குமாரும் ஈடுபட்டுள்ளார். அவருடன் கட்சியினரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தனது உண்ணாவிரதம் குறித்த செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. போதைப் பொருட்கள் பள்ளி சிறுவர்களை சென்றடைவது வருத்தமாக உள்ளது. ஆரோக்கியம் இருந்தால் தான் சிறந்த குடிமகனாக வாழ முடியும். இந்தியா மனித வளம் உள்ள நாடு. மனித வளத்தை நாம் பேணி காக்க வேண்டும்.

மெரினாவில் கூட சமீபத்தில் போதையில் தான் ஒருவர் கழுத்தை அறுத்து நகையை திருடி உள்ளார். இளைஞர் படை சீரழிந்து போனால் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்.

தமிழ்நாட்டில் கஞ்சா அதிக புழக்கத்தில் உள்ளது. அதற்காக தனிப்படையை உருவாக்கி தடுத்து மிகப்பெரிய தண்டனை கொடுத்தால் மட்டுமே இதனை குறைக்க முடியும்.

மதுவிலக்கு என்ற திமுக வாக்குறுதி நிறைவேற்றுவதற்கான சாத்தியமே இல்லை. டாஸ்மாக் இல்லாமல் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் அரசுக்கு கிடைப்பது மிகப்பெரிய கேள்வி குறிதான். கல்யாணம் காட்சி முதல் வேலை வரை அனைத்திலும் தற்போது குடி தான் இருக்கிறது.  டாஸ்மாஸ்கால் வரும் வருமானத்தை வேறுவழியில் ஈடு கட்டுவதற்கான நடவடிக்கையை முதலில் தமிழக அரசு பெருக்க வேண்டும்.

ஆன்லைன் ரம்மியில் நான் மட்டும் இல்லை ஷாருக்கான், தோனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். ரம்மி விளையாடுவது அறிவுப்பூர்வமான விளையாட்டு. ரம்மி விளையாட அறிவு வேண்டும். ரம்மி மட்டுமல்ல கிரிக்கெட் கூட சூதாட்டம் தான். விளையாட்டை வைத்து அனைவரும் சூதாடுகிறார்கள். சரத்குமார் சொன்னால் மட்டும் எப்படி ரம்மி விளையாடுவார்கள். ஓட்டு போடுங்கள் என்றும் தான் என கேட்கிறேன் ஆனால் எனக்கு ஓட்டு போட மாட்டேங்கிறார்களே என அங்கலாய்த்தார்.

தமிழ்நாடு அரசு அவசர சட்டம் இயற்றிய பிறகு நான் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடித்த விளம்பரமது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடித்த விளம்பரம் தான் தற்போது ஒளிபரப்பப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களிடன் கேள்விக்கு பதில் அளித்தவர்,  மாண்டஸ் புயலில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை சிறப்பாக இருக்கிறது என்றார்.

மேயர் பிரியாவின் புட்போர்டு சவாரி தொடர்பான கேள்விக்கு, சென்னை மேயர், முதல்வர் கான்வாய் வாகனத்தில் சென்றதை அனைவரும் ஏளனப்படுத்தி வருகின்றனர். இதில் எந்த தவறும் இல்லை. சூழ்நிலை என்னவென்று பார்க்காமல் நாம் பலர் வேடிக்கையாய் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார்.

உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுகிறதே என்ற கேள்விக்கு,  அமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின்க்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளேன் என பதில் அளித்தவர், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு, பதிலளிக்க மறுத்தவர்,  நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது கூட்டணி குறித்து பின்னர் முடிவு செய்வோம் என்றார்.