சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே மாமல்லபுரம் பகுதியில் கடந்த வாரம் கரை9ய கடந்தது. இதனால், அந்த காலக்கட்டங்களில் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்து இயல்பு நிலை திரும்பிய நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளை நடத்துவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

அதன்படி,  சென்னை அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 9ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 24ம் தேதியும், டிசம்பர் 10ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 31ம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.