சென்னை:
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22 அடியை தாண்டியது.

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கி உள்ளது. (மொத்த உயரம் 24 அடி). செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3,645 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 3028 மி.கன அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 83 சதவீதம் ஆகும்.

ஏரிக்கு 2,134 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. ஏரியில் இருந்து 234 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இன்றும் பலத்த மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதலாக உபரி நீரை திறக்க அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் தொடர்ந்து மழை இல்லாததால் கூடுதலாக தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. ஏரியில் 22 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க முடிவு செய்து உள்ளனர். இதன் பின்னர் கனமழை இருந்தால் மட்டும் உபரி நீர் திறக்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் 23 கன அடி வரை தண்ணீர் தேங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.