சென்னை: தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்த நிலையில்,  கடந்த 10 மாதங்களில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றவர்களிடம்  இருந்து, ரூ.5.49 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ஆர்டிஐ கேள்விக்கு டாஸ்மாக் நிர்வாகம் பதில் தெரிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும் 4,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பெரும்பாலான கடைகளில் கூடுதல் விலை வைத்து மது விற்பனை மற்றும் நிர்ணயித்த நேரத்தை கடந்தும் விற்பனை, மறைமுக பார்கள் உள்ளிட்ட புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் சென்னையில் பல இடங்களில் 24மணி நேரமும் மதுபான விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகார்கள் கொடுத்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை.

இந்த நிலையில், கூடுதல் விலைக்கு மது விற்றவர்களிடம் இருந்து ரூ.5.49 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக ஆர்டிஐ-ல் கேட்கப்பட்ட கேள்விக்கு டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

சமூக ஆர்வலர் காசிமாயன் என்பர் ஆர்.டி.ஐ.யில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில், கூடுதல் விலைக்கு மது விற்பவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என  கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு   டாஸ்மாக் நிறுவனம் பதில் அளித்துள்ளது.  அதில், கடந்தாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை சென்னை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட 29 மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. 4,658 விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.5.49 கோடி அபராதம் வசூலித்துள்ளதாக ஆர்.டி.ஐ. வாயிலாக தெரியவந்துள்ளது. 29 மாவட்டங்களில் அதிகபட்சமாக ஈரோட்டில் 397 விற்பனையார்களிடம் இருந்து ரூ.46.84 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளது.