ருள்மிகு கோடிக்குழகர் கோயில், அமுதகடேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்காட்டில் அமைந்துள்ளது.

மிகவும் பழமையானது இந்தக்கோயில். இராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன்பு இங்கு வந்தார். இவ்வூரிலிருந்து கடல் வழியே மிகக் குறுகிய தூரத்தில் இலங்கை இருக்கிறது. எனவே, இங்கிருந்து பாலம் அமைத்து இலங்கைக்கு செல்ல ஏற்பாடு செய்தான் சுக்ரீவன். ஆனால், இராமன் இங்கு பாலம் அமைக்க மறுத்துவிட்டார். இலங்கையின் பின்பக்கமாக கோடியக்காடு அமைந்துவிட்டதால், இராமபிரான் பின்பக்கமாக சென்று இராவணனைத் தாக்குவது தனக்கு பெருமை தராது எனக் கருதி, இலங்கையின் முன்பக்கமுள்ள தனுஷ்கோடிக்கு சென்றுவிட்டார். அவர் இங்கு வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில் இராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது. இராமன் இலங்கை செல்லும்போது இங்குள்ள சிவபெருமானை வணங்கினார். இவருக்கு “அமிர்தகடேஸ்வரர்” என்ற பெயரும் உண்டு.

திருப்பாற்கடலில் அமுதம் கடையும்போது அசுரர்கள் சூறாவளியை ஏற்படுத்தினர். அமுதப் பாத்திரத்தை ஏந்திச் சென்ற வாயுபகவான் அந்த சூறாவளியை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அமுதம் சிறிதளவு சிந்தியது. அதை முருகப்பெருமான் ஒரு கலசத்தில் ஏந்திக்கொண்டார். அந்த கலசத்துடன் அவர் காட்சி தருகிறார். இவரை வணங்குவோருக்கு ஆயுள்விருத்தி ஏற்படும். இங்கே சுவாமியை விட முருகனுக்கே முக்கியத்துவம். அருணகிரிநாதர் திருப்புகழில் இவ்வூர் சுப்பிரமணிய சுவாமியை புகழ்ந்து பாடியுள்ளார். சுந்தரரால் பாடல்பெற்ற தலம் இது. மிகவும் பழமையான இந்தக்கோயிலில் அம்பாள் மையார்தடங்கண்ணி அழகுபொங்க காட்சி தருகிறாள்.

உயர்ந்தோங்கிய இராஜ கோபுரம். கொடிமரமில்லை. பிரகாரத்தில் அமுத வினாயகர், முருகன் சன்னிதிகள் தனித்தனி கோயிலாக உள்ளன. இங்குள்ள முருகப்பெருமான் சிறப்பான மூர்த்தம். ஒருமுகம், ஆறு கரங்கள், ஒருகரத்தில் அமுத கலசம், மற்ற கரங்களில் நீலோற்பலம், பத்மம், அபயம், வச்சிரம், வேல் முதலியவை ஏந்திய அழகிய திருக்கோலம். மயில் வடக்கு நோக்குகிறது.

இத்தலம் கோளிலித்தலம் ஆகையால் நவக்கிரகங்கள் ஒரே திசையில் உள்ளன. முன்மண்டபத்தில் வலப்பால் காடுகிழாள் கோயிலும் அடுத்து தெற்கு நோக்கிய அம்பாள் சன்னிதியும் உள்ளன. மகாமண்டபத்தில் குழக முனிவர் உருவமுள்ளது. மூலவர் அழகிய திருமேனி. சதுர பீடம். இங்கிருந்து 1.5 கீ மீயில் ஆதிசேது எனப்படும் கோடிக்கரை உள்ளது . கோடியக்காடு காட்டுப்பகுதி என்பதால், மக்களின் பாதுகாப்பிற்காக “காடு கிழாள்” என்ற வனதேவதையும் இந்த கோயிலில் அருள்பாலிக்கிறாள். நவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று அருள்பாலிக்கின்றனர். கோஷ்டத்தில் பிரம்மா, துர்க்கா, இலிங்கோத்பவர் உள்ளனர்.

இவ்வூர் அமிர்தகடசுப்பிரமணியருக்கு வைகாசி விசாகத்தில் பத்துநாள் விழா, சஷ்டியில் ஆறு நாள் விழா நடக்கிறது.

 

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.