சென்னை; பரந்தூரில்  விமான நிலையம் அமைய  காரணம் திமுக எம்.பி. கனிமொழியும், முதல்வரின் குடும்பத்துக்கு சொந்தமான ஜிஸ்கொயர் நிறுவனம்தான காரணம் என நாம் தமிழர் கட்சி தலைவர்  சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.  இடங்களின் மதிப்பை கூட்டவே பரந்தூரில் விமான நிலையம் கொண்டுவர திட்ட மிட்டுள்ளது. திமுகவுக்கு சொந்தமான ஜி ஸ்கொயர் நிறுவனம் பரந்தூரில் இடம் வாங்கியுள்ளது என தெரிவித்தார்.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசும் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் தொடர்ந்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க 12 கிராம மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழகஅமைச்சர்கள், நிலத்துக்கு 3 மடங்கு விலை தருகிறோம், இடம் தருகிறோம், வேலை தருகிறோம் என ஆசைவார்த்தை கூறி வருகின்றனர். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

இந்த நிலையில்,  நேற்று முன்தினம் பாமக தலைவர் அன்புமணி அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நேற்று  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக பாதிக்கப்படும் கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டும், நெல் கொள்முதல் நிலையத்தையும் பார்வையிட்டும், பொது மக்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தார். அப்போது கிராம மக்கள்  சீமானின் கால்களில் வீழ்ந்து புதிய விமான நிலையம் அமைந்தால் ஆதலால் ஏற்படும் பாதகங்களை எடுத்துக்கூறியப்போது சீமானும் கண் கலங்கி அவர்களை சமாதானம் செய்தார்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசிய சீமான்,  நாங்கள் வானூர்திகளை எதிர்ப்பவர்கள் அல்ல, ஏற்கனவே சென்னையில் 1500ஏக்கரில் வானூர்தி நிலையம் உள்ளது. அதைக் கட்ட நிலம் கொடுத்தவர்கள் தான் நாங்கள்,  ஏற்கனவே இருக்கின்ற சென்னை வானூர்தியில்  என்ன பிரச்சனை இருக்கின்றது ??? சென்னை விமான நிலையத்தில்  100 முறைக்கும் மேல் கண்ணாடி உடைந்துள்ளது அதனை சரிசெய்ய முடியவில்லை.

தமிழகத்தின் தலை நகரான சென்னையில் முறையான சாலை வசதிகள் இல்லை இந்த லட்சணத்தில், இந்த விமான நிலையம் கட்டுவதால் யாருக்கு வளர்ச்சி?

இரண்டாவது ஏர்போர்ட் இந்த இடத்தில் அமைவதற்கு திராவிட முன்னேற்றக்கழக அரசு தான் காரணம், ஏர்போர்ட் வர காரணம் திமுக எம்பி கனிமொழி தான் காரணம், முழு காரணமும் திமுக தான், ஏனென்னறால் பரந்தூரை சுற்றியுள்ள எல்லா இடங்களையும் திமுகவினரின்  ஜி ஸ்கொயர் நிருவனம் வாங்கி வைத்துள்ளது, இங்கு ஏர்போர்ட் கட்டினால் தற்போதைய சந்தை மதிப்பை விட கூடுதலாக அவ்விடங்கள் விற்கப்படும் என்பது தான் காரணம்.

அதானி துறைமுகத்தை கட்டுவது போல் ஏர்போர்ட்டைக் கூட கட்டலாம். 4791.29 ஏக்கரில் ஏர்போர்ட் கட்டப்படுகிறது, இதை நேரடியாக அதானி கட்டினால் நாம் சண்டை போடுவோம் அதனால் அரசு கட்டி அவரிடம் கொடுக்கப் போகிறது. இந்த ஏர்போர்ட்டை கட்டி யாரிடம் கொடுப்பீர்கள்,

இந்த மாவட்டத்தில் நெல்லை கொள்முதல் பண்ணி வைக்க ஓர் முறையான குடோன் கிடையாது, ஆனால்  டாஸ்மாக்கில் விற்பதற்கு மதுபானங்களை சேமித்து வைக்க குடோன் உள்ளது, நெல் மூட்டைகளை மூடிட 40 கோடிக்கு தார்பாய்கள் வாங்கப்படும் என சொல்லும் இந்த அரசுக்கு ரூ.4 கோடியில் ஒரு குடோன் கட்டிட முடியவி ல்லை.

ஏர்போர்ட் எங்கு வேண்டும் என்றாலும் கட்டலாம், எந்தக் கொம்பாதி கொம்பனும் விவசாய நிலங்களை உருவாக்க முடியாது, ஒரு விவசாய நிலம் உருவாக வேண்டுமென்றால் பல தலைமுறையினரின் வேர்வையும்  ரத்தமும் அதில் சிந்தி இருக்க வேண்டும்.

தலைநகர் சென்னையில் மழை நீர் கழிவு நீர் வெளியேற இதுவரை ஒரு கால்வாய் வாய்கால் இல்லை , உங்களுக்கு என்று யாருமில்லை என எண்ண வேண்டாம், உங்களுக்கென நான் இருக்கின்றேன், நான் இங்கு இருக்கும் விமான நிலையம் இங்கு அமையாது என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, விளைநிலங்களை அழித்து ஒரு விமான நிலையம் அமைய வேண்டுமா? அதுதான் வளர்ச்சியா? ஏற்கனவே சென்னையில் ஒரு விமான நிலையம் இருக்கும்போது, இந்த புதிய நடவடிக்கை அவசியமற்றது. புதிதாக விமான நிலையம் அமைக்க என்ன தேவை வந்துவிட்டது? ஏற்கனவே உள்ள விமான நிலையத்தில் ஏதாவது பிரச்சினையா? புதிய விமான நிலையம் வேண்டும் என மக்கள் வீதிக்கு வந்து போராடினார்களா? மக்களின் வாழ்விடங்களையும், விளைநிலங்களையும், நீர்நிலைகளையும் அழித்து விமான நிலையம் கட்டுவதால் என்ன வளர்ச்சி கிடைத்துவிட போகிறது?

சென்னையில் மழை காலத்தின்போது வெள்ளநீர் வழிந்தோடுகிறது. கழிவுநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. சாலைகள் சரியல்ல. இதனை போக்க ஏதாவது தொலைநோக்கு திட்டங்களை அரசு கொண்டுவந்ததா?  இதுபோன்ற திட்டங்களால் சுற்றியுள்ள நில முதலாளிகள் வளரமுடியுமே தவிர, அடித்தட்டு மக்கள் வளரமுடியாது. அதனால் தான் மக்கள் ‘புதிய விமான நிலையம் வேண்டாம்’ என்று வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.

இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலம் இருப்பதாகவும், 3-ல்ஒரு பங்கு தான் மக்கள் நிலங்கள் வருகின்றன என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக் கிறார். அப்படி என்றால் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நில எல்லைக்குள்ளாக மட்டும் உள்ளூர் விமான நிலையத்தை கட்டிக்கொள்ளட்டுமே. எதற்காக 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கேட்கிறீர்கள்? இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த துடிப்பதின் அவசியம் என்ன?

எதிர்க்கட்சியாக இருக்கும்போது எட்டு வழி சாலைகளை எதிர்த்து போராடினீர்களா இல்லையா ?  கேள்வி எழுப்பினர். 8 வழி சாலை என்றால் நாங்கள் எதிர்ப்போம் என சொல்லிவிட்டு , தறபோது பயணம் தூர குறைப்பு சாலை என பெயர் மாற்றி விட்டார்கள், இது தவறு என திமுகவை கடுமையாக சாடினார்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு கையப்படுத்தும் நிலங்களுக்கு மூணரை மடங்கு அதிக விலை தருவோம்! அமைச்சர்கள் தகவல்…