சென்னை: தமிழ்நாட்டிலுள்ள 314 திருக்கோயில்கள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச்சான்றிதழ்கள் கிடைத்துள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரச் சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 754 திருக்கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் பழனி , ஸ்ரீரங்கம் ,திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகியவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் ஆகிய திருக்கோயில்களில் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  ஆண்டுக்கு ரூபாய் 76 கோடி செலவில் 754 திருக்கோவில்களில் நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இந்த கோவில்களில் 314 கோவில்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தர சான்றிதழ்கள் கிடைத்துள்ளது. அதன்படி, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், சென்னை தங்கசாலை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் ,திருமுல்லைவாயில் அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவில், மகாபலிபுரம் அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவில், சென்னை அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், சென்னை அருள்மிகு கங்காதீஸ்வரர் கோவில் ஆகிய திருக்கோவில்களின் இணை ஆணையர் , செயல் அலுவலர்களை முதலமைச்சர் பாராட்டி தர சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் அரசின் சீரிய முயற்சியால் 308 திருக்கோவிலுக்கு தர சான்றிதழ் பெறப்பட்டு உள்ளது.  மேலும் 440 திருக்கோவிலுக்கு சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந்தியா முழுவதும் 394 மத வழிபாட்டு தலங்களுக்கு மட்டுமே இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில்,  தமிழ்நாடு அரசால் 314 திருக்கோவிலுக்கு சான்றிதழ் பெறப்பட்டு தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இதன் மூலம் திருக்கோயில்களுக்கு வரும்   பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரித்து வழங்க படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது.