சென்னை: தமிழகத்தில், செப்டம்பர் 1ந்தேதி முதல்  கல்லூரிகள் திறந்து நேரடி வகுப்புகளை நடத்த தமிழக உத்தரவிட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து, அரசு கலை அறிவியல் கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கல்லூரிக்கு வர அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது,

அனைத்து கல்லூரிகளும் தங்கள் கல்லூரிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டு கருவிகள், ஆய்வகங்கள் போன்றவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

கட்டாயமாக அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாத பணியாளர்கள் இரு தவணை தடுப்பூசிகளையும் போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போடாத பணியாளர்கள் (ஆசிரியர் மற்றும் அசிரியரல்லாப் பணியாளர்கள்) கட்டாய விடுப்பில் அனுப்படுவர்.

தடுப்பூசி போடப்பட்டவர்களின் (மாணவர்கள்,ஆசிரியர் மற்றும் அசிரியரல்லாப் பணியாளர்கள் ) விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அரசு கோரும் போது உடன் வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

கோவிட் – 19 சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகள் இணையவழி வகுப்புகளை தொடர நாளை (ஆகஸ்ட் 25) நடைபெற உள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

பெற்றோர், ஆசிரியர் கழக கூட்டம் கூட்டி பெற்றோர்களின் ஆலோசனையை பெறல் வேண்டும்.

சுகாதாரத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தடுப்பூசி போடதவர்களுக்கு கல்லூரியிலேயே போட ஏற்பாடு செய்ய வேண்டும்

நோய் தொற்று அறிகுறி உள்ள மாணவர்களை கண்டறிந்தால் உடன் அவருடன் தொடர்பிலிருந்த அனைவருக்கு RT-PCR டெஸ்ட் எடுக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிக்கு வருகை தர அவசியமில்லை.

கல்லூரி வளாகத்தினுள் பயன்படாத பிளாஸ்டிக் கப்புகள், தேநீர் கப்புகள், டயர்கள், விஷ ஜந்துக்கள் தஞ்சமடையும் இடங்களை உடன் அப்புறப்படுத்த வேண்டும்.

நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வழகளில் கண்காணிப்பு குழு அமைத்து SOP முறை பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

சுத்தமான குடிநீர் வசதியினை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்.

கல்லூரி துவங்குவதற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே வளாகத்தினை சுத்தம் செய்திட முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.