சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,  2021-2022 ஆம் நிதியாண்டுக்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு அரசால் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே , கீழ்குறிப்பிட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிகள் ஆய்வின் போது கவனத்தில் கொண்டு சத்துணவு வழங்குதல் தடையின்றி வழங்கப்படுதலை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 50 இலட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். தற்போது , கோவிட் -19 காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்களின் மதிய உணவை பெற்று கொள்ள முடியாத நிலை உள்ளது. மேற்கண்ட காரணமாக சில பின்தங்கிய மாணவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்திட குழந்தை தொழிலாளர்களாக மாறும் சாத்தியங்கள் உள்ளன. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையால் பள்ளிகளில் இடைநிற்றலை கனிசமாக அதிகரிப்பதுடன் அவர்களின் எதிர்காலமும் வெகுவாக பாதிக்கிறது.

அரசாங்கம் இதை தவிர்த்திடும் வகையில் மதிய உணவு திட்டத்தில் ரொட்டி மற்றும் முட்டையும் சேர்த்து பள்ளிக் குழந்தைகளுக்கு தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கிட அரசின் பரிசீலனையில் உள்ளது.

மேலும் , பள்ளிக் குழந்தைகள் யாரேனும் உடல் உழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனாரா என்பதை ஆய்வு அலுவலர்கள் மேற்பார்வை செய்து குறைகள் இருப்பின் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் மூலம் அவற்றை நிவர்த்தி செய்து பள்ளி மாணவர்கள் பயன்பெற தக்க வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.