சென்னை : மாநிலம் முழுவதும் கல்வி நிலையங்கள் தொடங்கப்படாத நிலையில், தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பள்ள கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி, தனியார் பள்ளிகளில் முதல் தவணையில் 40 சதவீதமும், 2ஆம் தவணையில் 35 சதவீதம் என 75 சதவீதம் கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. ஆனால், ஆன்லைன் மூலம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கல்வி போதித்து வருகின்றன.நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் கல்வியாண்டு தொடங்கியதால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது. முன்னதாக மாணாக்கர்களை முழுக்கட்டணம் செலுத்தச்சொல்லி வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு உத்தரவிட்ட  நீதிமன்றம் தவணை முறையில் 75 சதவீதம்  கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அதே உத்தரவு இந்த ஆண்டும், அதே நிலை நீடிக்கும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் காரணமாக 2021 ஏப்ரல் 24ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் முடப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2021-22ஆம் கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளில் கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன எனப் புகார்கள் வருகின்றன.

தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் மட்டும் கல்வி கட்டணம் வசூல் செய்ய வேண்டும்.

முதல் தவணையில் 40 சதவீதம் கட்டணத்தை ஆகஸ்டு  31ஆம் தேதிக்குள் வசூல் செய்யலாம். மீதமுள்ள 35 சதவீதம் கட்டணத்தை நேரடி வகுப்புகள் தொடங்கிய பின்னர் 2 மாதங்களில் வசூல் செய்யலாம்.

மீதமுள்ள 25 சதவீதம் கட்டணங்களை வசூல் செய்வது குறித்து கரோனா பெருந்தொற்றின் நிலையை பொருத்து அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]