சென்னை: வறுமையில் வாடுவதாக முதல்வர் தனிப்பிரிவில் மனுகொடுத்த, நடிகர் தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

கூறப்பட்டுள்ளதாவது, ” ‘எம்.கே.டி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ்த் திரைப்பட உலகின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும் மிகச்சிறந்த கர்நாடக சங்கீத பாடகருமாக திகழ்ந்தவர். அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக தமிழ்நாட்டில் அன்றைய காலகட்டத்தில் உலா வந்தன.

குறிப்பாக 1944 ஆம் ஆண்டு வெளியான ‘ஹரிதாஸ்’ என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்டார்.

எம்.கே. தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய்ராம் குடும்பத்தினர், தற்போது மிகவும் ஏழ்மை நிலையில், குடியிருக்க வீடு இன்றி, மிகவும் சிரமமான சூழ்நிலையில் வசித்து வருகின்றனர். இதனை அறிந்த தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின், சாய்ராம் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், பொது ஒதுக்கீட்டின் கீழ் வீடு ஒதுக்கித் தர உத்தரவிட்டுள்ளார்.

மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கவும் ஆணையிட்டுள்ளார்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.