சென்னை: புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற ராஜீவ் ரஞ்சன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை  சந்தித்து வாழ்த்து பெற்றார்..

தலைமைச் செயலாளராக இருந்த சண்முகம் இன்றுடன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்துரு. தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை செயலாளராக பணியாற்றி வந்த ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று தலைமைச்செயலகத்தில் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று காலை 7 மணிக்குத் தமிழகத்தின் 47-ஆவது தலைமைச் செயலாளராக ராஜீவ் பதவியேற்றார். தற்போது  60 வயதான ராஜீவ் எம்.எஸ்.சி, எம்.பி,ஏ பட்டதாரி ஆவார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ்ரஞ்சன் , 1985ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார்.

இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம்.மில் எம்.பி.ஏ. படித்த இவர், அறிவுசார் சொத்துரிமை பிரிவில் ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளார். லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் மையத்தில், பப்ளிக் பாலிசியில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் தெரியும்.

தமிழக அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். மத்திய அரசின் அயல் பணியில் 11 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

2007ம் ஆண்டு முதல் இணைச் செயலாளர் அந்தஸ்திலும், 2009ம் ஆண்டு முதல் முதன்மை செயலாளர் அந்தஸ்திலும் பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார்.

மத்திய அரசின் சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சிலில் சிறப்பு செயலாளர் உள்பட தமிழக அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.

இவரது பதவிக்காலம் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரையே.

தமிழக அரசில் இதுவரை 46 தலைமை செயலாளர்கள் பணிபுரிந்துள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள  ராஜீவ்ரஞ்சன், தமிழக அரசின் 47வது தலைமை செயலாளர் ஆவார்.

தலைமைச் செயலாளராக பதவி ஏற்ற ராஜீவ் ரஞ்சன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதேவேளையில், ஓய்வுபெற்ற தலைமைச்செயலாளர் சண்முகம்   தமிழக அரசின் ஆலோசகராகத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.