சேலம் : சேலம் அருகே மாயமான பள்ளி மாணவனை போலீசார் தேடி வந்தநிலையில்  அந்த மாணவன் அந்த பகுதியில் உள்ள ஒரு  கிணற்றில் சடலமாக கிடந்தது தெரிய வந்தது. அவனது உடலை  மீட்ட போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணையில், அந்த மாணவன் நீச்சல் பழகிய போது  எதிர்பாராத நிலையில் தண்ணீர் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் மல்லூர் அருகேயுள்ள நிலவாரப்பட்டி மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். அவரது மகன் 8 வயதான  நிஷாந்த். இவர் அந்த பகுதியில் உள்ள  அரசுப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் சம்மவத்தன்று காலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென  மாயமானான். இதனால், அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர்கள் மற்றும்  உறவினர்கள் அப்பகுதி முழுவதும் தேடினர். ஆனால் சிறுவன் கிடைக்காத நிலையில், அருகே உள்ள  மல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து, காவல்துறையினர்  சிறுவன் நிஷாந்த் குறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியிலும் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். அந்த பகுதியில் ஏராளமான திறந்தவெளி விவசாய கிணறுகள் இருப்பதால், சிறுவன் ஏதாவது கிணற்றில் தவறி விழுந்திருக்க வாய்ப்பு இருப்பதால்,  அதிலும் தேடி வந்தனர். மேலும்,  செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கiள அழைத்து , அப்பகுதியில் உள்ள 5 கிணறுகளில் தேடினர். ஆனால், சிறுவன் எங்கும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில்,  காணாமல் போன சிறுவன் வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள தனியார் ஒருவரது விவசாய கிணற்றில் சிறுவன் நிஷாந்த் சடலமாக மிதந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், அங்கு சென்று பார்த்தனர். அப்போது, அந்த கிணற்றில் 5 லிட்டர் குடிநீர் கேனும், அதனுடன் சிறுவனின் சடலும் மிதந்தது.

இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியழுதனர். இதையடுத்து  தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சிறுவன் நிஷாந்தின் சடலத்தை மீட்டனர்.

சிறுவன் நிஷாந்த், உடலில் கேனை கட்டிக்கொண்டு நீச்சல் பழக கிணற்றில் இறங்கியிருக்கலாம் என்றும், அப்போது கயிறு அவிழ்ந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவனுடன் வேறு யாரேனும் குளிக்க சென்றார்களா? என்ற கோணத்திலும், அவன் எவ்வாறு உயிரிழந்தான் என்பது பற்றியும் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாயமான சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.