சென்னை: நாட்டின் 77வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வீரதீர செயலுக்கான பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.


நாட்டின் 77வது குடியரசு தினவிழா  இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை  மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே  அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் முதல்வர் முன்னிலையில்,  ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து முப்படை வீரர்கள் மற்றும் தமிழக அரசின் துறை சார்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கான வேளாண் துறையின் சிறப்பு விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

விழாவை ஒட்டி மெரினா காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை முழுவதும் 7 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குடியரசு நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய விருதுகள்:

வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் பெற்றவர்கள்,  நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்புத்துறை ஓட்டுனர் சங்கர், தீயணைப்பு துறையைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் ரமேஷ், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த பீட்டர் ஜான்சன் ஆகியோர்.

கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கலிமுல்லாவுக்கு வழங்கப்பட்டது,

சிறந்த நெல் சாகுபடிக்கான நாராயணசாமி நாயுடு விருது தஞ்சாவூரைச் சேர்ந்த வீரமணிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த காவல் நிலையத்திற்கான விருது:  முதல் பரிசு மதுரை மாநகரம்,  இரண்டாவது பரிசு திருப்பூர் மாநகரம், மூன்றாவது பரிசு கோயம்புத்தூர் மாவட்டம்

காந்தியடிகள் காவலர் பதக்கம் விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் நடராஜன், விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சத்யாநந்தன்,  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன், கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நடராஜன், சேலம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் கண்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

[youtube-feed feed=1]