கடலூர்: தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறி உள்ளார்.

சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதிமுக, திமுக,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன. இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழுவும் தமிழகத்தில் முகாமிட்டு தேர்தல் குறித்து ஆலோசனை நடத்திவிட்டு சென்றுள்ளது.

இந் நிலையில் சட்டசபை தேர்தல் தொடர்பாக கடலூரில் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டது. கடலூரில் 178 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை. தமிழகத்தில் பாதுகாப்பு பணிகள் எப்போதும் போல் சிறப்பானதாகவே இருக்கும். 21 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர் என்று கூறினார்.