கோழிக்கோடு

நிபா வைரஸ் பரவலையொட்டி கோழிக்கோடு மாவட்டத்தில் 7 கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நிபா வைரஸ் பரவல் காணப்பட்டது. இதில் 2018-ம் ஆண்டு 17 பேர் வரை உயிரிழந்தனர்.

சமீபத்தில் 4 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 9 வயது சிறுவன், 4 வயது சிறுவனும் அடங்குவார்கள். கேரள சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் 75 பேர் உள்ளனர். மேலும் 130 பேர் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளனர்.

கேரள சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.  நிபா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில பள்ளிகள் மற்றும் அலுவலகங்களை அதிகாரிகள் மூடியுள்ளனர். அரசு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் சட்டசபையில், இந்த நிபா வைரசானது குறைவான தொற்றக் கூடிய தன்மை கொண்டபோதும், அதிக உயிரிழப்பு விகிதம் கொண்டது என்றும் இது மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவக் கூடியது என்றும் கூறியுள்ளார்.

புனே நகரின் தேசிய வைராலஜி மையத்தின் குழுவினர் கேரளாவுக்குச் சென்று மொபைல் ஆய்வகங்களை அமைத்து பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளனர்.  கேரள அரசு 7 கிராம பஞ்சாயத்துக்களைக் கட்டுப்பாடு மண்டலமாக அறிவித்துள்ளது.

அதாவது கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆத்தஞ்சேரி, மருதோங்கரை, திருவள்ளூர், குட்டியடி, காயக்கொடி, வில்லியப்பள்ளி மற்றும் கவிழும் பாறை ஆகிய 7 பஞ்சாயத்துகளில் உள்ள 43 வார்டுகளின் உள்ளேயும், வெளியேயும் செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களின் விற்பனைக்கான கடைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.