சென்னை

டுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக இன்று முதல் ஜூன் 10-ம் தேதி வரை 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தென்கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இப் புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.  வங்க தேசம் வழங்கியுள்ள ‘பிபோர்ஜோய்’ என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும்.

புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலால் கேரளா முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.