சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்த, தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவை அதிமுக முழுமனதுடன் வரவேற்கிறது என எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று   2021 – 2022 ஆம் ஆண்டிற்கான உயர் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை  மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்தார். அதன்படி,    இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை  வழங்கப்படும்.. தொழிற்கல்வி படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை குறைவாக உள்ளது. எனவே கிராமப்புற மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “பெரும்பாலும் ஏழை, எளிய, நடுத்தர குடும்ப மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர்; அவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி கற்க முடியாத சூழல் உள்ளது. தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன் வடிவை ஒரு மனதாக நாங்களும் ஆதரிக்கிறோம். முதலமைச்சர் முன்மொழிந்த மசோதாவை அதிமுக முழுமனதுடன் ஆதரிக்கிறது என்று கூறினார்.