சென்னை: அசைவ பிரியர்களுக்காக ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகஅரசு தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது. தினசரி தடுப்பூசிகள் அரசு மருத்துவ மனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில்  தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் வேளையில், ஞாயிறு தோறும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் அமைத்து, லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், 6-ம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வரும் 23–ந்தேதி சனிக்கிழமை அன்று  50 ஆயிரம் மையங்களில் நடைபெறும் என்றும், இந்த முறை,  அசைவ பிரியர்களுக்காக ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமை முகாம் நடத்தப்படும் என்றும்   தெரிவித்தார்.

அசைவம் சாப்பிட்டால், மது அருந்தினால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கூடாது என்ற வதந்தியை பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்குகிறார்கள். இது தவறு. இருந்தாலும் அவர்களுக்காக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.  இதனை அனைவரும்  பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 4வது மெகா தடுப்பூசி முகாமில் 10 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள். கடந்த 5வது மெகா தடுப்பூசி முகாமின்போது 11 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள். இந்த வாரம் 30 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.