சென்னை: சென்னை அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக 6 ஆயிரத்து 450 படுக்கைகள் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கடந்த சில நாட்களாக தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளதுடன், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளையும் மாநில அரசு முன்னெடுத்து வருகிறது.

அதன்படி,  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அறிகுறி இல்லாதவர்கள், நுரையீரல் பாதிப்பு இல்லாதவர்கள், இணை நோய்கள் இல்லாதவர்களை வீட்டுக் கண்காணிப்பில் இருந்து சிகிச்சை பெற சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. அதற்காக,   6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார்நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பெரும்பாலோர் வீட்டுத் தனிமையில் இருந்து வரும் நிலையில், பலர் அதற்கான வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.  அவர்கள் சிகிசிச் பெறும் வகையிலும், கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 6 ஆயிரத்து 450 படுக்கைகள் தயாராக உள்ளன.

அதன்படி சென்னை சென்ட்ரல், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக 700 படுக்கைகளும், ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 250 படுக்கைகளும் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.

ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் 290-க்கும் மேற்பட்டவர்களும், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 188 பேரும், ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் 141 பேரும், கிண்டி கிங்ஸ் ஆஸ்பத்திரியில் 280 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 115 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் 7 சதவீதம் மட்டுமே தற்போது நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.