சென்னை: புதிய கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, விமான நிலையங்களில் கொரோனா சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில்  கடந்த 3 நாட்களில் 600 பேருக்கு புதிய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சீனா, அமெரிக்க, பிரேசில் உள்பட பல நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் மாறுபாடான பிஃப்7 என்ற தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி,   இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும்,  விமான நிலையங்களில் வெளிநாடு களில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி , கடந்த வெள்ளிக்கிழமை (23ந்தேதி) முதல்,  நாடு முழுவதும் விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை  தொடங்கப்பட்டு உள்ளது.

அதன்படி, சென்னை விமான நிலையம் சர்வதேச முனையம் வருகைப் பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை தமிழக சுகாதாரத்துறை  செய்து வருகிறது.   குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்த பரிசோதனை நடக்கிறது.

அந்த பயணிகளில்,  இருமல், சளி மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் இருக்கும் பயணிகளை தேர்வு செய்கின்றனர்.  அதன்படி, தேர்வு செய்யப்பட்ட 2 சதவீதம் பயணிகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடக்கிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 600 பயணிகளுக்கு புதிய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர். அதே வேளையில்,   மற்ற பயணிகள் விருப்பப்பட்டால் அவர்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம். 12 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை கிடையாது. ஆனால் அவர்களில் யாருக்காவது, இருமல், சளித்தொல்லை போன்றவைகள் அதிகமாக இருந்தால், அவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படும் என்றும்,   பரிசோதனை முடிவுகளை அடுத்த அரை மணி நேரத்தில்  வாங்கிவிட்டு செல்லலாம் என்று கூறும் அதிகாரிகள்,  பரிசோதனை முடிவில், அவர்களுக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தால், உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதோடு அந்தப் பயணிகள் மருத்துவமனைகள் அல்லது அவர்களின் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.