டெல்லி: அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான நாடு முழுவதும் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற வன்முறை போராட்டத்தில்,  12 ரெயில்களில் 60 பெட்டிகள் எரிக்கப்பட்டு உள்ளதாகவும், சுமார் ரூ.170 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் மத்தியஅரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மத்திய அரசு ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் இளைஞர்கள் சேருவதற்காக அக்னிபாத் என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது. இதற்கு இளைஞர்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த திட்டத்தினால், ஓய்வூதியம் கிடைக்காது. சலுகைகள் ரத்தாகும் என்று ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் கருதுகிறார்கள். இதனால், இந்த திட்டத்தை வாபஸ் பெறக்கோரி, பீகார் உள்பட பல வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தால் வன்முறை ஏற்பட்டது.

இளைஞர்கள் ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினார்கள். இதன்  காரணமாக நாடு முழுவதும் 12 ரெயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இன்று மேலும் சில ரெயில்கள் தாக்குதலுக்குள்ளானது. தீ வைக்கப்பட்ட 12 ரெயில்களில் சுமார் 60 ரெயில் பெட்டிகள் முழுமையாக எரிந்து நாசமாகிவிட் டன. நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதம் அடைந்துவிட்டன. இதையடுத்து நாடு முழுவதும் சுமார் 220 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இளைஞர்கள் நடத்தி வரும் வன்முறை சம்பவங்களால் ரெயில்கள் மட்டுமின்றி இன்று காலை பீகார் உள்பட சில மாநிலங்களில் லாரிகள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டன. இதன் காரணமாக ரூ.170 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.