திருச்சி:  அரசு பள்ளிகளின் தரத்தை உயர்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வரும் பள்ளிக்கல்வித்துறை, சர்வதேச விளையாட்டு தினத்தை முன்னிட்டு, திருச்சி யில் இருந்து ஐதராபாத்துக்கு 60 மாணவா்களை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளது.

திமுக அரசு பதவி ஏற்றதும், அரசு பள்ளிகள் மற்றும் மாணவ மாணவிகளின் தரம் உயர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு (2022) மாணவர்களுக்கு இணையவழி வினாடி வினா போட்டிகளை நடத்தி, மாவட்ட மற்றும் மாநில அளவில் வினாடி வினா போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற 68 மாணவ மாணவிகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில்  துபாய் அழைத்துச் செல்லப்பட்டனர். அதுபோல செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கும்போதும், அரசு பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிலையில், சர்வதேச விளையாட்டு தினத்தை முன்னிட்டு, திருச்சியில் இருந்து ஐதராபாத்துக்கு 60 மாணவா்களை விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். அரசு மற்றும்  அரசு உதவி பெறும், தனியாா் பள்ளி ஆகிய 3 பள்ளிகளைச் சோ்ந்த சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவா்கள் திருச்சியிலிருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் சென்றனா்.

இவர்கள் ஐதராபாத்தில் உள்ள  ஹாா்ட்புல்னஸ் சா்வதேச விளையாட்டு மைதானத்துக்கு அவா்கள் அழைத்துச் செல்லப்படுவதுடன்,  அடுத்த 2 நாள்களுக்கு அவா்கள் மையத்தில் நடைபெறும் விரிவுரைகளைக் கேட்பதுடன், விவாதங்களில் பங்கேற்று, திறன் அடிப்படையிலான மேம்பாட்டு ஆராய்ச்சியின் செயல்பாடுகளை மேற்கொள்வா் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் தெரிவித்தாா்.

இந்தப் பயணத்தின்போது, முனைவா் பட்ட ஆய்வுப் பணிகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் மேற்கொள்வாா் என அமைச்சா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தெலங்கானா மாநிலத்தில் உள்ள சல்ல லிங்கா ரெட்டி நினைவு ஜில்லா பரிஷத் பள்ளியின் உள்கட்டமைப்புகளைப் பாா்வையிட்டு, அங்கிருந்த ஆசிரியா்கள், மாணவா்களுடன் கலந்துரையாடினாா். நிகழ்வில் தெலங்கானா மாநில பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் தேவசேனாவும் பங்கேற்றுள்ளார்.