பெருங்களத்தூர்

தாயை விட்டுத் தான் மட்டும் மின்சார ரயிலில் ஏறித் தவித்த சிறுவனை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

சென்னை புறநகரான தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்காக கண்டிகையைச் சேர்ந்த கிரிஜா என்பவர் தனது 6 வயது மகன் ஜீவாவுடன் ரயில் நிலையம் வந்தார். செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் நடைமேடைக்கு வந்ததும் கிரிஜா முதலில் தனது மகனை ரயிலில் ஏற்றிவிட்டு, பின்னர் அவர் ஏற முயன்றார்.

கிரிஜாவால் கூட்டநெரிசல் காரணமாக மின்சார ரயிலில் ஏறமுடியவில்லை.  அவர் ஏறுவதற்குள் மின்சார ரயில் செங்கல்பட்டுக்குப் புறப்பட்டுச் சென்றது. தனியாக ஏறிய அவருடைய மகன் ஜீவா பரிதவித்தான். அதே வேளையில் பெருங்களத்தூர் ரயில் நிலைய நடைமேடையில் நின்றபடி கிரிஜா கதறி அழுதார்.

அங்கிருந்த பயணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவலர் முருகலிங்கம் ஆகியோர் மின்சார ரயிலில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் பிரசாத் என்பவருக்குத் தகவல் தெரிவித்து அவர், மின்சார ரயிலில் பரிதவித்த சிறுவன் ஜீவாவை மீட்டு வண்டலூர் ரயில் நிலையத்தில் இறக்கி கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் பெருங்களத்தூர் அழைத்து வந்தார்.

பிரசாத் பெருங்களத்தூர் நடைமேடையில் கண்ணீருடன் நின்ற கிரிஜாவிடம் மகனை ஒப்படைத்தார். அவர் கண்ணீர் மல்கக் கதறி அழுதபடி மகனைக் கட்டி அணைத்துக்கொண்டார். மின்சார ரயிலில் பரிதவித்த சிறுவனை மீட்டு உடனடியாக தாயிடம் ஒப்படைத்த ரயில்வே காவல்துறையினரைப் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்