மாமல்லபுரம்

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதில் 6 பேர் உயிர் இழந்தனர்.

சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்துள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் மணமை என்ற பகுதியில் இன்று ஒரு  கோர விபத்து நேரிட்டுள்ளது.  புதுச்சேரி நோக்கி சென்னையிலிருந்து சென்று கொண்டிருந்த அரசு பேருந்தானது, எதிர்த்திசையில் கல்பாக்கம் வழியாகச் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் ஆட்டோ அப்பளம் போல சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் ஆட்டோவில் பயணித்த 2 பெண்கள், சிறுமி, சிறுவன், ஆட்டோ ஓட்டுநர் உட்பட 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாமல்லபுரம் காவல் துறையினர் மற்றும் மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் ஆகியோர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் யார்? யார்? என்பது இன்னும் அறியப்படவில்லை.  இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.