கொல்கத்தா

று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கு வங்க சட்டசபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கும்பல் மேற்கு வங்காளம் மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில்  பலாத்காரமாக நிலத்தைக் கைப்பற்றியதாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டி, ஏராளமான பெண்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவர் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் ஊழல் செய்ததாக அவரது வீட்டில் சோதனை நடத்தச்சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர்.  கடந்த மாதம் முதல் ஷாஜகான் தலைமறைவாக உள்ளார். சந்தேஷ்காலியில் நிலவும் அமைதியின்மையைச் சுட்டிக்காட்டி ஷாஜகானை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, மேற்கு வங்காள சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கியதிலிருந்து, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இன்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டுவர திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர். சோபந்தேப் சட்டர்ஜி முன்மொழிந்தார். இதற்கு அனுமதி அளித்த சபாநாயகர் பிமன் பானர்ஜி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 6 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, அக்னிமித்ர பால், மிஹிர் கோஸ்வாமி, பங்கிம் கோஷ், தபசி மோண்டல் மற்றும் ஷங்கர் கோஷ் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள்  தற்போதைய அமர்வின் மீதமுள்ள பகுதி அல்லது 30 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.