மும்பை

காங்கிரஸ் கட்சியில் இருந்து மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவான் விலகி உள்ளார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.பாஜக. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் தேர்தல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி வருவது அக்கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். கடந்த மாதம் முரளி தியோரா மகன் மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்தார்., காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரான பாபா சித்திக்கும் விலகினார்.

இன்று மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், போகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். மேலும் அவர்  தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். அவர் சபாநாயகர் ராகுல் நர்வேகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார்.

அசோக் சவான் 2008 டிசம்பரில் இருந்து 2010 நவம்பர் வரை மராட்டியத்தில் முதல்வராகப் பதவி வகித்தார்.   பிறகு 2014 முதல் 2019 வரை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளார். காங்கிரஸில் இருந்து விலகிய அசோக் சவான், விரைவில் அவர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.