சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் 5ஆயிரம் கோயில்கள் திருப்பணி  செய்வதற்கான மானியம் வழங்கியதுடன் ஒருங்கிணைந்த  தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார். பின்னர்,  பெண்களுக்கு ஆட்டோ ரிக்சா மானியம்  தொகையான ரூ.1 லட்சடம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். முதலில்,  1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் மற்றும் 1,250 கிராமப்புறத் திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.2 இலட்சம் வீதம் ரூ.50 கோடிக்கான வரைவோலைகளை சம்பந்தப்பட்ட நபர்களிடம் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து,   ரூ.2.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகங்களை முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

பின்னர்,  தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா வாங்குவதற்காக தலா 1 இலட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.