சென்னை: புதிய வாகனங்கள் வாங்கும்போது 5வருடம் இன்சூரன்ஸ் கட்டாயம் என்றும், இந்த புதிய நடைமுறை  செப்டம்பர் 1ந் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் சென்னை  உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தது தொடர்பாக அவரது  குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன்  குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து, இன்சூரன்ஸ் நிறுவனமான  நியூ இந்திய அஷுரன்ஸ் கம்பெனி,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் விவாதத்தின்போது, காப்பீட்டு நிறுவனம்  சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாகனத்திற்கான ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் என்ற அடிப்படையில் மட்டுமே வனத்துக்கு காப்பீடு எடுக்கப்பட்டதாகவும், ஓட்டுனர் அல்லாத ஒருவர் இறப்பிற்கு ஒரு லட்ச ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என்று கூறியது

இதை  ஏற்றுக் கொண்ட நீதிபதி வைத்தியநாதன், ஈரோடு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். அதேசமயம் புதிய வாகனத்தை வாங்கும் போது அது எவ்வாறு செயல்படும் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுபவர்கள், காப்பீடு நடைமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்வதில்லை என வேதனை தெரிவித்த நீதிபதி, இது தொடர்பாக, காப்பீடு நிறுவனங்களும் முழுமையான விபரங்களை தெரிவிப்பதில்லை என்று குற்றம் சாட்டினார்.

இதையடுத்து,  செப்டம்பர் 1ம் தேதி முதல், தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும்  அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு  செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ,  காப்பீட்டு நிறுவனங்களுக்கு உரிய உத்தரவுகளை  பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக செப்டம்பர் 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.