டெல்லி: சிறந்த புலனாய்வு பணிக்காக தமிழக காவல்துறையைச் சேர்ந்த 5 போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கியதற்காக 151 காவலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம் வழங்கப்பட உள்ளது.  புலன் விசாரணையில் சிறந்து விளங்கியதன் அடிப்படையில் மத்திய புலனாய்வு முகமைகள், மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேச காவல் படையின் உறுப்பினர்களுக்கு புலன் விசாரணையில் சிறந்த சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்பட்ட 151 காவல் அதிகாரிகளில் 28 பேர் பெண்கள்.  சி.பி.ஐ.யில் இருந்து 15 பேரும், மராட்டியத்தில் இருந்து 11 பேரும், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து 10 பேரும், கேரளா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்களத்தில் இருந்து தலா 8 பேரும், தமிழகத்தில் இருந்து 5 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் குஜராத், கர்நாடகா, டெல்லி மற்றும் இதர மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் மத்திய உள்துறை விருது பெறும் அதிகாரிகள் விவரம்: 

  1.  கூடுதல் எஸ்.பி. கனகேஸ்வரி,
  2. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அமுதா,
  3. சசிகலா,
  4. பாண்டி முத்துலட்சுமி 
  5. சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜன்

ஆகிய 5 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு விருது கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குற்றவியல் விசாரணையின் உயர் தொழில்முறை தரங்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், விசாரணை அதிகாரிகளின் புலனாய்வு சிறப்பை அங்கீகரிக்கும் நோக்கத்துடனும் இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.