சென்னை: இன்னும் 3 மாதத்திற்குள் (செப்டம்பர்) மருத்துவத்துறையில்  காலியாக உள்ள பணியிடங்களில் 4 ஆயிரம் காலி பணி இடங்கள் நிரப்பப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மாவட்டங்களில் ஆய்வு செய்து வரும் அமைச்சர் இன்று, ஈரோடு மாவட்டத்தில் ஆய்வு நடத்தி வருகிறார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 75 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்க ராசிபுரம் தாலுகா போதமலையில் உள்ள கெடமலைக்கு சென்றார்.

முன்னதாக அப்போது, கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.  அங்கு பணியில் இருக்க வேண்டிய டாக்டர் சண்முகவடிவு பணி நேரத்தில் சுற்றுலா சென்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டவர்  ஆயில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஜம்புத்துமலை பகுதிக்கு காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து கெடமலைக்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடை பயணமாக சென்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் சண்முகவடிவு பணி நேரத்தில் சுற்றுலா சென்றதாக புகார் எழுந்தது. மேலும் அங்கு பணியாற்றும் மற்றொரு டாக்டர் தினகரன், அவரது மகனை சட்டத்திற்கு புறம்பாக அரசு ஆஸ்பத்திரி யில் டாக்டராக பணி செய்ய அனுமதித்ததாகவும் புகார் எழுந்தது. அது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் புகார் உறுதியானதால் 2 டாக்டர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மருத்துவத் துறையில் 1,021 டாக்டர்கள் உள்பட 4 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளது. அதை செப்டம்பர் மாதம் இறுதிக்குள் மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும்.

அமைச்சர் மா.சு.உடன் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் துரைசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.