இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில், 100 வயதைக் கடந்த 4 பெண்மணிகளை, முறையாக வரி செலுத்துபவர்கள் என்று அறிவித்து கெளரவித்துள்ளது வருமான வரித்துறை.
இதில், பினாவைச் சேர்ந்த கிரிஜா பாய் திவாரி என்ற 117 வயதான மூதாட்டி குறிப்பிடத்தக்கவர். இந்தியாவில், வரி செலுத்தும் வயதான நபர் இவராகத்தான் இருப்பார் என்று அதிகாரிகள் வட்டம் தெரிவித்துள்ளது. அவருடைய கணவருக்கான பென்ஷனை பெற்று வருகிறார் இந்த மூதாட்டி.
இவரைத்தவிர, சாகர் மாவட்டத்தின் 103 வயதுடைய ஈஸ்வரி பாய் லுல்லா, இந்தூரைச் சேர்ந்த 100 வயதுடைய காஞ்சன் பாய், சத்தீஷ்கரின் பிலாஸ்பூரைச் சேர்ந்த 100 வயதான ரக்சித் ஆகியோர் இந்த கெளரவப் பட்டியலில் இணைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும், தங்களின் வருமான வரியை ஒழுங்கான முறையில் தவறாமல் செலுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்து கெளரவித்தனர்.