சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு வழங்கிய அரிசு, பருப்புடன், ரூ. 1,000 ரூபாயை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு, மாநிலம்  முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒருகிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1000, ரொக்கம் வழங்கப்பட்டது.  அதன்படி பொங்கல் பரிசு பெற 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 அட்டைதாரர்கள் தகுதி பெற்றவர்கள் என கூறியதுடன், அதற்காக ரூ.1000 ஒதுக்கி அந்தந்த ரேஷன் கடைக்கு அனுப்பப்பட்டது. அதன்படி, சென்னையில் 10,18,728 அட்டைதாரர்கள், தென்சென்னையில் 10,39,552 குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து பொங்கலையொட்டி, சுமார் ஒரு வாரம் பொங்கல் பரிசு  வழங்கப்பட்டது. இதை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும், ஒருசிலர் பணம் வேண்டாம் என்று இருந்து விட்டனர்.  , வடசென்னையில் 9 லட்சத்து 83,005 பேரும், தென்சென்னையில் 9 லட்சத்து 90,014 பேரும் ரூ.1000 வாங்கிச் சென்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8026 அட்டைதாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,263 அட்டைதாரர்களும் வாங்கவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் 8,874 அட்டைதாரர்களும் ரூ.1000 பரிசு தொகுப்பு வாங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை ரூ.1,000 வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பி வந்துள்ளதாகவும் கூட்டுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.