சென்னை: ஆசிரியர் பணிக்கான டெட் தேர்வு தேதி 3வது முறையாக மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 14-ம் தேதி நடைபெறும் என அறிவித்து உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஆகஸ்டுமாதம் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை உள்ள தேதிகளில் தாள்- 1 ற்கு மட்டும் முதற்கட்டமாக கணினி வழியில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

பின்னர் தேர்வு தேதி செப்டம்பர் 10ந்தேதி என அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களினால், தாள் 1-ற்கான தேர்வு செப்டம்பர் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்பட இருப்பதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், மீண்டும் TET தேர்வுக்கான புதிய தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தற்போது, 3வதுமுறையாக, அக்டோபர் 14-ம் தேதி தொடங்குவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அக்டோபர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை TET எனப்படும் ஆசிரியர் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு 7 நாட்களுக்கு முன்பாக எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும், 3 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையத்தின் விவரமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.