நெல்லை:
நெல்லை பொன்னாக்குடி கல்குவாரி விபத்தில் சிக்கிய 3வது நபர் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. அங்கு உடைத்து வைத்திருந்த கற்களை லாரிகள் மூலம் எம் சாண்ட் தயாரிக்கும் பகுதிக்கு எடுத்துச் செல்லும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இங்கு நேற்று நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக ராட்சச பாறை சரிந்த விழுந்ததில், தொழிலாளர்கள் 6 பேர் 300 அடி பள்ளத்தில் சிக்கி உள்ளனர். தகவலறிந்த முன்னீர் பள்ளம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தவிர 300 அடி பள்ளத்தில் 3 ஜேசிபி இயந்திரம் மற்றும் இரண்டு லாரிகள் சிக்கியுள்ளது.

இந்த ராட்சச பாறை விழுந்த இடத்தில் ஆறு தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், தற்போது 3வது நபர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.