சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று தொடங்கிய பிளஸ்2 பொதுத் தேர்வில் 32,674 பேர் ஆப்சென்ட் ஆனதாக தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.  பொதுத்தேர்வுக்காக மாநிலம் முழுவதும்  3,119 மையங்களில் தயார்படுத்தப்பட்டு அதில் தேர்வுகள் நடைபெற்றது. மொத்தம்  8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ-மாணவிகள் எழுதுவதாகவும், அவர்களில்  3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் இதில் அடங்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன்,   தனித்தேர்வர்கள் 28,353 பேரும், மாற்றுத்திறனாளிகள் 3,638 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும், சிறைக்கைதிகள் 73 பேரும் எழுதுகின்றனர்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பிளஸ்2 முதல்நாள் தேர்வில் 32,674 மாணவர்கள் ஆப்சென்ட் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றைய தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனவும்  தேர்வில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக 1000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டன என தேர்வுத்துறை குறிப்பிட்டுள்ளது.