கொல்கத்தா:

கண்கட்டி வித்தை செய்யும் ஆசாமியால் பில்லி சூனிய பொம்மையாக பயன்படுத்தப்பட்ட 3 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார்.

மேற்கு வங்க மாநிலம் புரில்லா மாவட்டத்தை சேர்ந்த 3 வயது சிறுமியை அவரது தாய் பங்குரா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சிறுமியின் தாய் ஒரு முன்னாள் ஊர்காவல் படை வீரர் வீட்டில் வேலை செய்து வந்தார்.

சிறுமிக்கு சளி, காய்ச்சல் இருக்கிறது என்று கூறி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால், சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததை கண்டு சந்தேகமடைந்த டாக்டர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் தாயிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் கண்மூடி வித்தைகள் செய்யக் கூடியவர் என்பதும், சிறுமியை பில்லி சூன்யம் எடுக்கும் பொம்மையை போல் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்த சிறுமி அரசு சார்பில் நடத்தப்படும் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுமிக்கு உடல் முழுவதும் கடுமையான காயங்கள் இருந்தது. மேலும், சிறுமியின் உடலில் பல இடங்களில் 7 ஊசிகள் சொறுகி இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதோடு பாலியல் ரீதியாகவும் அந்த சிறுமி துன்புறுத்தப்பட்டிருந்தார்.

அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அவற்றை வெற்றிகரமாக அகற்றினர். 48 மணி நேரத்திற்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் ஊசி குத்தப்பட்டு நீண்ட நாட்களாகியிருந்த காரணத்தால் அதன் பாதிப்பு அந்த சிறுமிக்கு அதிகளவில் ஏற்பட்டிருந்தது.

இதனால் சிறுமி பரிதாபமாக இறந்தாள். அவருக்கு நுரையீரல் பாதித்துள்ளது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் முழு விபரங்கள் தெரியவரும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டன நபரை தேடி வருகின்றனர்.