இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது மோதலில் ஈடுபட்ட 7 உறுப்பினர்கள் சபைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பட்ஜெட் உரையின் நகல்கள் கிழித்து எறியப்பட்டன. ஆளும் கட்சியின் பெண் உறுப்பினர் காயம் அடைந்தார்.

பாகிஸ்தானில் நாடாளுமன்ற கீழ் சபையில் 2021-22 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை (பட்ஜெட்) அந்த நாட்டின் நிதியமைச்சர் சவுகத் தரின் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. பாகிஸ்தான் எதிர்க்கட்சியான முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராகவும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கும் ஷெபாஸ் ஷெரீப் பட்ஜெட்டில் விவாதத்திற்கான உரையை தொடங்கினார் . அப்போது அவையில் கடும் கூச்சல் குழப்பம் எழுந்தது.

பாகிஸ்தான் ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) உறுப்பினர்கள் கடும் கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியான முஸ்லிம் லீக் (நவாஸ்) உறுப்பினர்களும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருக்கையில் இருந்து எழுந்து வந்து நேருக்கு நேர் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.

ஆவேசம் அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பட்ஜெட் உரையின் நகல்களை கிழித்து எறிந்தனர். இதனால் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெண் உறுப்பினர் மாலேகா பொகாரி கண்ணில் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆளும் பி.டி.ஐ தலைவர் அலி அவான் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்து பயங்கரமாக கூச்சலிட்டார்.

ஒட்டு மொத்தத்தில் நாடாளுமன்றமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் மோதல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. முன்னதாக கண்ணில் காயமடைந்த பெண் உறுப்பினர் மாலேகா பொகாரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பி.டி.ஐ.யின் மூன்று பேர் உட்பட ஏழு எம்.பிக்களை சபைக்குள் நுழைய தேசிய சட்டமன்ற சபாநாயகர் அசாத் கைசர் இன்று தடை விதித்தார்.